சிறந்த நிர்வாகத்திற்கோர் எடுத்துக் காட்டு

கிரி/ மதீனா தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய ஜனாப் எம். ஆர் எம் சக்கரியா அவர்கள் இன்று (24.08.2020) தனது 35 வருட கால சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை ஏறக்குறைய 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கல்வி நிலையமாகும். ஆதன் நிழலில் வளர்ந்து வளம் பெற்றவர்கள் பலர். அதில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரே ஜனாப் எம்.ஆர் .எம் ஸகரியா அவர்கள்.

எம்..ஆர் .எம். ஸகரியா அவர்கள் 1960.08.24 ம் தகதி சியம்பலாகஸ்கொட்டுவ எனும் அழகிய கிராமத்தில் அல்ஹாஜ் ரசீத், ஆசியா உம்மா தம்பதியினருக்கு அன்பு மகனாகப் பிறந்தார் .

தனது ஆரம்பக் கல்வியை இதே மதீனா தேசிய பாடசாலையிலே தொடங்கி உயர்தரம் வரை கற்று 1982/ 1983 ம் கல்வியாண்டில் உள்வாரி மாணவனாக பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வியை தொடரும் பொழுதே 1985 ஆம் ஆண்டில்  ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்று தனது கல்விச் சேவையை பறகஹதெனிய தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கிறார்.

தொடர்ந்து குறீகொடுவ சுலைமானியா முஸ்லிம் வித்தியாலயத்தில் சேவையாற்றிய அவர்கள் தனது பட்டப்படிப்பை திறமையான முறையில் பூர்த்தி செய்து ( ) சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் உதவி ஆசிரியராக இணைந்து கொள்கிறார்.

தொடர்ந்து வந்த காலப் பகுதிகளில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகிய அதிபர் அவர்கள் யகம்வெல மத்திய கல்லூரி, பண்டார கொஸ்வத்த முஸ்லிம் மகா வித்தியாலயம், மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயம் என வெவ்வேறு காலப் பகுதிகளில்  இடமாற்றம் செய்யப்பட்டார்.

இக்காலப் பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அதிபர் சக்கரிய்யா அவர்கள் தனது துணைவியாரின் ஊரான மாவனல்லைக்கு இடமாற்றம் பெற்று மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலை, ஆர்.ரிவிசந்த மத்திய கல்லூரி என்பவற்றில் ஆசிரியராக, அதிபராக இருந்து தனது சேவையை திறம்பட செய்ததோடு இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS –Gr 1) அதிபராகவும் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

புகுந்த ஊரில் இருந்து அமைதியாக தனது சேவையை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்த அத்தருணம் அவரது பிறந்த ஊரான சியம்பலாகஸ்கொடுவ ஒரு சிறந்த அதிபருடைய தேவையில் திணறிக் கொண்டிருந்தது.

ஆம்! எமது சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை சிறியதொரு சரிவினை சந்தித்துக் கொண்டிருந்த வேளையிலே பாடசாலையின் 22 ஆவது அதிபராக 2014.03.20 இல் பாடசாலையைப் பொறுப்பேற்றார்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய மதீனத்தாயின் மடிமீதிருந்து அவளை வளர்த்தெடுப்பதில் தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற அவரது ஆசைக் கனவு நனவாகின்றது.

ஒரு இக்கட்டான கால கட்டத்தில் பாடசாலையைப் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று 2020.08.24 ஓய்வு பெற்றுச் செல்லும் வரை பாடசாலையின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது தன்னை அர்ப்பணித்து சேவை புரிந்தவர் அதிபர் ஸக்கரியா சேர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

புதிய அதிபரின் வருகையுடன் எமது மதீனக் கலையகம் புதியதொரு அத்தியாயத்தில் கால் பதிக்க ஆயத்தமானது என்றே கூறலாம். இவரது காலப் பகுதியை மதீனாவின் பொற்காலம் எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. பாடசாலையின் ஆரம்ப காலம் முதலே எமது பாடசாலையுடன் நெருக்கமான உறவு இவர்களுக்கு இருந்து வந்துள்ளது.

இவரது அன்புத் தந்தையார் மர்ஹூம் அல்ஹாஜ் ரசீத் அவர்கள் இப்பாடசாலை ஆரம்பித்த காலப்பகுதியில் தொண்டர் ஆசிரியராக பாடசாலைக்கு தொண்டு செய்தவர். தந்தையின் வழியில் தனயனும் நின்று கல்லூரியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.

பாடசாலையின் பெயரும் புகழும் மீண்டும் நாடெங்கும் பரவும் வகையில் பாடசாலையைக் கட்டியெழுப்புவதில் அரும்பாடுபட்டார்.  அதில் வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வந்த பரீட்சைப் பெறுபேறுகளும் ஏனைய பௌதிக வள மாற்றங்களும் இவ்வெற்றிகளுக்கு சான்றாக அமைகின்றன.

ஆசிரியர்களுக்கு மத்தியிலும் ஏனைய சகல செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற தனது சிந்தனைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். தனது விடாமுயற்சியினாலும் ஆளுமையினாலும் பல செயற்திட்டங்களை பாடசாலையில் நடைமுறைப்படுத்தினார். பாடசாலையின் இலட்சினையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

திருத்த வேலைகளுக்காக அரசினால் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தின் மூலம் பாடசாலையின் திருத்த வேலைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பாடசாலைச் சூழலை புதிய மாற்றத்துடன் வடிவமைத்தார்.

அதிபர் சக்கரியா அவர்களின் முயற்சியில் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் உதவியடன் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், மூன்று மாடிகளைக் கொண்ட உயர்தர தொழிநுட்ப பிரிவு கட்டடம் என்பன நிர்மாணிக்கப்பட்டு மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மேலும் மூன்று மாடிகளுடனான நிர்வாகக் கட்டடம் (Administration Block) நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்து செயற்பட்டவர் எமது அதிபர் அவர்களே.

பாடசாலையின் உயர் தர தொழிநுட்ப பிரிவு  ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் 13 வருட கட்டாயக் கல்வித்திட்டம் அனுமதியும் பெறப்பட்டு அதற்குரிய பௌதீக வளங்களும் இவரது காலத்திலேயே பெறப்பட்டன என்பது பெருமையுடன் கூறிக் கொள்ளவேண்டிய விடயங்களாகும்.

தன் கடமையில் சற்றேனும் சளைத்து விடாத அதிபர் அவர்கள் கொடை வள்ளலான கொழும்பு ஏசியன் ஹாட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச். ஹாஜா ஹூசைன் அவர்களின் அனுசரணையுடன் மதீனா ஆண் மாணவர் விடுதியின் 2ம், 3ம் மாடிகள் நிர்மாணம் செய்யப்பட்டு கசல வசதிகளுடனும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் கேட்போர் கூடம் புதுப் பொழிவுடன் மெருகூட்டப்பட்டு 534 சொகுசு இருக்கைகள் பொருத்தப்பட்டதும் எம் அதிபர் அவர்களின் பாரிய முயற்சியினாலேயாகும்.

பாடசாலை வளவில் இருந்த  பள்ளிவாசலின் மேல்மாடி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக செய்து கொடுக்கப்பட்டதோடு ஆண் மாணவர்களுக்கு வேறாகவும் பெண் மாணவிகளுக்கு வேறாகவும் என மலசலகூட வசதிகள், குடி நீர் வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.

இவ்வாறான சேவைகள் பலவற்றை எமக்காக செய்த அதிபர் அவர்களின் காலத்திலேயேதான் கலையகத்தின் 60 ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதனோடு இணைந்ததாக நடாத்தப்பட்ட மாபெரும் கல்வியியல் கண்காட்சி வரலாற்றுப் புகழ்மிக்கதாக அமைந்திருந்தது.

அத்தோடு பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன பாடசாலை ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட நன்கொடையின் மூலம் பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த போக்குவரத்து வசதியின் பொருட்டு சொகுசு பேரூந்து வண்டியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டு மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இது அதிபர் அவர்களின் சேவைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மகத்தான சேவை எனலாம்.

அத்தோடு ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதத்தில் ஆரம்ப பிரிவு வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டமையும் அதிபர் அவர்களின் முயற்சியினாலேய ஆகும்.

மிகக் குறுகிய காலமே இருந்தாலும் மாணவர்களின் கற்றல் தேவைகளை உணர்ந்து உரிய வழிகாட்டல்களை மேற்கொண்டமையினால் 2019ம் ஆண்டு வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகள் பாடசாலைக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்ததுடன் அனைவரும் எமது பாடசாலையை திரும்பிப் பார்க்கக் காரணமாக அமைந்தது.

ஆக்கம் :

ரிஸ்வானா (ஆசிரியை)